யானை வழித்தடத்தை ஈஷா மையம் ஆக்கிரமித்துள்ளதா?: துரைமுருகன் கேள்வி!

யானை வழித்தடத்தை ஈஷா மையம் ஆக்கிரமித்துள்ளதா இல்லையா என்பது குறித்து நேரடியான பதில் வேண்டும் என தமிழக சட்டசபையில் வனத்துறை அமைச்சருக்கு துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டசபை இன்று காலை தொடங்கியது. அப்போது கேள்வி நேரம் தொடங்கும் போது அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையில் அவைக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தை பேச வேண்டும் என கேட்டனர். மேலும் முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் தொடர்ந்து அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவைக் காவலர்களை வைத்து அதிமுக எம்எல்ஏக்கள் அவர்களை வெளியேற்றி இன்று முழுவதும் அவர்களுக்கு அவையில் அனுமதி இல்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதையடுத்து வெளியே வந்த அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் கேள்வி நேரம் முடிந்ததும் விவாதங்களை போடுவதுதான் அவையின் மரபு. அப்படியிருக்கும் கேள்வி நேரம் முடிந்ததும் கள்ளக்குறிச்சி விவகாரத்தைத்தான் பேசியிருந்திருப்போம். எனவே அதுவரை பொறுமைக் காக்காமல் அதிமுக எம்எல்ஏக்கள் ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இவ்வாறு செய்கிறார்கள். நேற்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியதை நான் தவறே சொல்லமாட்டேன். அது அவர்களுடைய ஜனநாயக உரிமை. அது போல் அவர்களும் அவை மாண்பை காக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்எல்ஏ ஆசன் மவுலானா, கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்துதான் ஈஷா யோகா மையம் கட்டப்பட்டு என்கிறார்களே! இதுகுறித்து அமைச்சர் மதிவேந்தனின் கருத்தை அறிய விரும்புகிறேன் என்றார்.

அப்போது குறுக்கிட்ட அப்பாவு, இதெல்லாம் கவன ஈர்ப்பு தீர்மானமாக எழுதி கொடுத்திருந்தால் விவாதிக்கலாமே என சொன்ன போது அமைச்சர் மதிவேந்தன் எழுந்து நின்று, யானைகளின் வழித்தடம் குறித்து பெரும்பாலானோருக்கு பாதியளவுக்குத்தான் அறிவு இருக்கிறது. அதனால்தான் யானைகள் வழித்தடம் குறித்து நான் விளக்கிக் கொண்டிருந்தேன். அதற்குள் உறுப்பினர் ஈஷா மையம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ஆக்கிரமிக்கப்பட்டதா இல்லையா என்பதை அறிய முதல்வர் தலைமையில் ஒரு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அறிக்கையை வைத்துதான் ஒரு முடிவுக்கு வர முடியும். யானை நிபுணர்களையும் வைத்தும் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது என்றார்.

அப்போது குறுக்கிட்ட அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், உறுப்பினர் கேட்ட கேள்வி, யானைகள் வழித்தடத்தை ஈஷா யோகா மையம் ஆக்கிரமித்துள்ளதா இல்லையா என்பதுதான். இதை அமைச்சர் வாயிலாக நேரடியான பதிலை அறிய விரும்புகிறேன் என்றார். அப்போது அமைச்சர் மதிவேந்தன் மீண்டும் அதே பதிலை தெரிவித்தார். அதற்கு துரைமுருகன், “பத்திரிகை செய்திகளில் யானைகள் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டதாக வருகின்றன. எனவே வனத்துறை அமைச்சகம் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகின்றன. இன்னுமா ஆய்வு செய்யவில்லை. ஏன் ஆய்வு செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். இரு அமைச்சர்களிடையே வாக்குவாதம் எழுந்தது போல் இருந்தது.