இந்திரா காந்தி பெருமை புரியாமல் அண்ணாமலை பேச வேண்டாம்: செல்வபெருந்தகை

“விடுதலைப் போராட்ட காலத்தில் பல ஆண்டுகாலம் சிறையில் இருந்த நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்எஸ்எஸ் வழிவந்த பாஜக அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்று தமிழக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை உரையாற்றியிருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியை குறிப்பாக மறைந்த இந்திரா காந்தி குறித்து கூறியிருந்தார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற நிலை வந்த போது, ஜனநாயகத்துக்கு விரோதமாக நெருக்கடி நிலையை 1975ல் அறிவித்து, சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் பேரை கைது செய்து சிறையிலடைத்தார். அரசியலமைப்புச் சட்டத்தில் சுமார் 75க்கும் அதிகமான திருத்தங்களை மேற்கொண்டது காங்கிரஸ் கட்சி. அவற்றில் பெரும்பாலானவை, நெருக்கடி காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை. அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு, சர்வாதிகாரம் வழங்கியவை. ஆனால், நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள், கடந்த 10 ஆண்டுகளில் கொண்டு வந்த 8 திருத்தங்களும், பட்டியல் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு காலத்தை அதிகப்படுத்தியது, பெண்களுக்கான இட ஒதுக்கீடு என அனைத்தும் சமூக நீதி சார்ந்தவை. இந்தியாவில், அரசியலமைப்புச் சட்டம் குறித்தும், ஜனநாயகம் குறித்தும் பேசக் கூடாத ஒரே கட்சி காங்கிரஸ் கட்சியாகத்தான் இருக்க முடியும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும், மணிப்பூரில் இருந்து மும்பை வரையிலும் தேசிய ஒற்றுமை பயணங்களை மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து உரையாடி, பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதற்காக குரல் கொடுத்து மக்கள் தலைவராக உயர்ந்து நின்ற ராகுல் காந்தி, மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இன்று பொறுப்பேற்பது நாட்டு மக்களிடையே மிகுந்த எழுச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த மக்களவை தேர்தலில் 10 ஆண்டு கால நரேந்திர மோடியின் மக்கள் விரோத, பாசிச, அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து தமது பரப்புரையின் மூலம் மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்டவர் ராகுல் காந்தி. அவரது பரப்புரையின் காரணமாக பா.ஜ.க.வுக்கு மீண்டும் ஆட்சி அமைய அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று அரசமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்ற ஜனநாயகம் வழங்கியிருக்கிற எதிர்கட்சித் தலைவர் என்ற பதவியை முதன்முறையாக ராகுல் காந்தி பெற்றிருக்கிறார். இது இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். ராகுல் காந்தி நியமனத்தை தமிழ்நாடு வரவேற்று மகிழ்கிறது.

நெருக்கடி நிலை முடிந்தவுடன் ராஜீவ் காந்தியும், சஞ்ஜய் காந்தியும் ஆட்சியாளர்களுக்குப் பயந்து வெளிநாடுகளுக்கு தப்பியோட முயன்றார்கள் என்று ஓர் அப்பட்டமான அவதூறு செய்தியை அரைவேக்காடு அண்ணாமலை கூறியிருக்கிறார். அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி தான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். நெருக்கடி நிலை முடிந்ததும் பிரதமர் இந்திரா காந்தி நடத்திய தேர்தலில் அவரே வெற்றி வாய்ப்பை இழந்ததன் மூலம் ஜனநாயகத்தை உலகத்துக்கு நிரூபித்தார்.

எந்த நிலையிலும் எவருக்கும் அஞ்சாமல் விடுதலைப் போராட்ட காலத்தில் பல ஆண்டு காலம் சிறையில் இருந்த நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க. அறிந்திருக்க வாய்ப்பில்லை. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே, வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.