முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு!

ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டார் என்று கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற தொழிலதிபர் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். இதையடுத்து, கரூர்- மேலக்கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதரும், கரூர் டவுன் காவல் நிலையத்தில் நில அபகரிப்பு குறித்து ஒரு புகார் அளித்து இருந்தார். இதன் அடிப்படையில் ஷோபனா, யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்ற அச்சமடைந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜூன் 12 ஆம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை ஜூன் 25 ஆம் தேதி நடந்தபோது, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், முன் ஜாமீனும் மறுக்கப்பட்டதால் தலைமறைவானார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் விஜயபாஸ்கரை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிபிசிஐடி தனிப்படை போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.