குழந்தைகளுக்காகவே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: மா.சுப்பிரமணியன்!

ரூ. 250 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும், ரூ. 50 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை இன்று சட்டசபையில் வெளியிட்டுள்ளார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று சட்டசபை கூட்டத்தில், மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானிய கோரிக்கையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 110 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்புகளில் முக்கியமானவை:

1. ரூ. 250 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை கலைஞர் நூற்றாண்டு உயிர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்படும்.

2. ரூ. 50 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை சென்னையில் அமைக்கப்படும்.

3. ரூ.16 கோடி மதிப்பீட்டில் 6 மண்டல ஆராய்ச்சி மையங்கள் நிறுவப்படும்.

4. ரூ. 27 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய்களை கண்டறியும் மையம் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுப்படுத்தப்படும்.

5. விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைப் பிரிவு சேவைகளை மேம்படுத்த 5 அவசரகால மருத்துவ அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

6. பச்சிளங் குழந்தைகள் சிறப்பு கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படும்.

7. ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் பச்சிளங் குழந்தைகளை கண்காணிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

8. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு “ஊடுகதிர் பரிசோதனை” மேற்கொள்ளப்படும்.

9. ரூ. 3.19 கோடி மதிப்பீட்டில் சிறுநீரகம் – விழித்திரை பாதிப்புக்கான சிறப்பு பரிசோதனைகள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும்.

10. ரூ. 26.62 கோடி மதிப்பீட்டில் “பாதம் பாதுகாப்போம்” திட்டம் செயல்படுத்தப்படும்.

11. ரூ. 32 கோடி மதிப்பீட்டில் இருதய உள்ளூடுருவி கதிரியக்க ஆய்வகங்கள் திருவள்ளூர், கடலூர், இராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் நிறுவப்படும்.

12. ரூ.101 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் 25 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்.

13. அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் ரூ.18.13 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

14. மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் 25 இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் வழங்கப்படும்.

15. ரூ. 1.08 கோடி மதிப்பீட்டில் பழங்குடியின மலைவாழ் மக்களுக்கான மருத்துவ சேவைகள் ஏற்படுத்தப்படும்.

16. 25 அரசு மருத்துவக் கல்லூரிகளில் நவீன தொழில்நுட்பத்துடன் 100 வகுப்பறைகள் ரூ.50 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

17. அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதியோர் பராமரிப்பும், முத்தான சான்றிதழ் படிப்பும் தொடங்கப்படும்.

18. உயிர்காக்கும் எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை சென்னை ஸ்டான்லி, கோயம்பத்தூர், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.