எமர்ஜென்சியில் எங்களை சிறையில் தள்ளினர், ஆனால் துன்புறுத்தவில்லை: லாலு பிரசாத்!

“முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எங்களை எமர்ஜென்சி காலத்தில் சிறையில் போட்டிருந்தாலும் கூட எங்களை இந்திரா காந்தி துன்புறுத்தவில்லை” என்று லாலு பிரசாத் யாதவ் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் லாலு பிரசாத் யாதவ், “The Sangh Silence in 1975” என்ற தலைப்பில் தானும் பத்திரிகையாளர் நலின் வர்மாவும் இணைந்து எழுதிய கட்டுரையைப் பகிர்ந்துள்ளார். அந்தக் கட்டுரையில் இருவரும் பாஜக தலைமையிலான மத்திய அரசை சாடியுள்ளனர். 1975-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி நம் நாட்டின் ஜனநாயகத்தின் மீதான களங்கம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் கூட 2024-ல் எதிர்க்கட்சியை மதிக்காத அரசை நாம் மறைந்துவிடக் கூடாது என்று லாலுவும், நலினும் குறிப்பிட்டுள்ளனர்.

“அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்தியிருந்த எமர்ஜென்சியை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணனால் முன்னெடுக்கப்பட்ட இயக்கத்தின் வழிநடத்துதல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நான் இருந்தேன். மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான் 15 மாதங்கள் சிறையில் இருந்தேன். அப்போது நானும் என்னுடன் இருந்தவர்கள் யாரும் இப்போது எமர்ஜென்சி பற்றிப் பேசுபவர்களை அங்கே பார்த்தது இல்லை. மோடி, நட்டா அவர்களின் அமைச்சரவையின் இன்னும் சில சகாக்களை நாங்கள் பார்த்தது இல்லை. இன்று அவர்கள்தான் சுதந்திரத்தின் மதிப்பீட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திரா காந்தி எங்களில் பலரை சிறையில் தள்ளியிருக்கலாம். ஆனால், அவர் எங்களை துன்புறுத்தல் செய்ததில்லை. அவருடைய அமைச்சர்கள் யாரும் எங்களை தேச துரோகிகள் என அழைத்தது இல்லை. இந்திய அரசியல் சாசனத்தை கட்டமைத்த அம்பேத்கரின் நினைவுகளைச் சிதைக்கும் வகையில் யாருக்கும் இந்திரா அதிகாரம் அளிக்கவில்லை. 1975-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி நம் நாட்டின் ஜனநாயகத்தின் மீதான களங்கம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் கூட 2024-ல் எதிர்க்கட்சியை மதிக்காத அரசை நாம் மறந்துவிடக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 1975 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் 21 மாத கால அவசரநிலையை அறிவித்திருந்தார். இந்த ஆண்டு அதன் 50-வது ஆண்டாக அமைந்துள்ளது. ஆகையால், அதுதொடர்பான வாத-விவாதங்கள் அரசியல் களத்தில் வலுப்பெற்றுள்ளன.

மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவும் எமர்ஜென்சி தொடர்பாக அவையில் தீர்மானம் நிறைவேற்றினார். அதில், “1975ல் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட முடிவை இந்த அவை கடுமையாகக் கண்டிக்கிறது. எமர்ஜென்சியை எதிர்த்து போராடி, இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றிய அனைவரின் உறுதியையும் நாங்கள் பாராட்டுகிறோம். ஜூன் 25, 1975 இந்திய வரலாற்றில் எப்போதும் ஒரு கருப்பு அத்தியாயமாக அறியப்படும். இந்த நாளில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை விதித்து, பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்தினார்.

இந்தியாவில் ஜனநாயக விழுமியங்களும் விவாதங்களும் எப்போதும் ஆதரிக்கப்படுகின்றன. ஜனநாயக விழுமியங்கள் எப்போதும் பாதுகாக்கப்படுகின்றன. அவை எப்போதும் ஊக்குவிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட இந்தியாவில் சர்வாதிகாரத்தை திணித்தார் இந்திரா காந்தி. அதன் காரணமாக, இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள் நசுக்கப்பட்டன; கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒட்டுமொத்த தேசமும் அப்போது சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போதைய சர்வாதிகார அரசாங்கம் ஊடகங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. நீதித்துறையின் தன்னாட்சி மீதும் கட்டுப்பாடு இருந்தது” என்று தெரிவித்திருந்தார்.’

தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தின் முதல் உரையில், “இன்னும் சில மாதங்களில் இந்தியா குடியரசு நாடாக 75 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளது. இந்திய அரசியலமைப்பு கடந்த பத்தாண்டுகளில் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் தாங்கி நிற்கிறது. நாட்டில் அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட பிறகு, அரசியல் சாசனத்தின் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன.

1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம் (எமர்ஜென்சி) அரசியல் சாசனத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். அதைத் திணித்ததும் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆனால் அத்தகைய சக்திகளுக்கு எதிராக நாடு வெற்றி கண்டது. இந்திய அரசியலமைப்பை வெறும் நிர்வாக ஊடகமாக மாற்ற முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தை, பொது உணர்வின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதனடிப்படையில், நவம்பர் 26ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாக இந்த அரசு கொண்டாடத் தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது அங்கு 370வது சட்டப்பிரிவு காரணமாக நிலைமை வேறுபட்டது.” என்று கூறியிருந்தார். இந்தச் சூழலில் லாலு பிரசாத் யாதவின் இந்தக் கருத்துகள் கவனம் பெற்றுள்ளனர்.