மீனவர்கள் 25 பேர் கைது: பாம்பனில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்!

தமிழக நாட்டுப் படகு மீனவர்களின் 4 படகுகளை கைப்பற்றி 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததைத் தொடர்ந்து, பாம்பனில் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் கைதைக் கண்டித்து, பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.

பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் சென்ற இருதயராஜ், ஸ்டீபன், ஜார்ஜ் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று நாட்டுப் படகுகள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்தாக மூன்று படகுகளையும் திங்கட்கிழமை அதிகாலை கைப்பற்றினர். மூன்று படகுகளிலிருந்த இருதயராஜ், கிராசியன், லியோனஸ், ஆரோக்கிய மெக்ரின், டிகாஸ், மெக்கெல், தயாளன், முருகன், சக்தி செல்வம், எசக்கி முத்து, களஞ்சியம், ராஜன், ஜார்ஜ், கென்னடி, தாஸ், அந்தோணி, தேவதாஸ், லாரன்ஸ், சூசைராஜ் ஆகிய 19 மீனவர்களையும், தனுஷ்கோடி கடற்பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற ஒரு நாட்டுப் படகு, அதிலிருந்த 6 மீனவர்கள் என 25 மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

இதனைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 25 நாட்டுப் படகு மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் இன்று திங்கட்கிழமை காலை மீனவர்கள் பாம்பனில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ராமேசுவரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் மீன்வளத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.