முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர் சந்திப்பு!

மத்திய அரசின் மூன்று சட்டங்களை எதிர்த்து போராடிவரும் வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பினர், அனைத்து மாநில முதல்வர்களையும் சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளனர்.

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா மற்றும் பாரதிய சாக் ஷியா ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் வில்சன் எம்.பி. தலைமையில் வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர் சந்தித்து 3 சட்டங்கள் தொடர்பாக பேசினர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பி.வில்சன் கூறியதாவது:-

மூன்று சட்டங்களையும் ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்திய பொதுநல மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதில், எவரோ ஒருவர் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு அளித்து விட்டது என இந்த விவகாரத்தை எடுத்துக் கொள்ள முடியாது. வழக்கறிஞர், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் இந்த சட்டம்அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சஸ்பெண்ட் செய்து இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருக்கிற சட்டங்களை எடுத்துவிட்டு உச்சரிக்க முடியாத மொழியில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அவசர அவசரமாக இந்த சட்டம் கொண்டு வந்து மத்திய அரசு என்ன சாதிக்க போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் பேசும்போது, ‘‘முதல்வரை சந்தித்து, மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளதற்கு நன்றி தெரிவித்தோம். மேலும், தமிழக எம்.பி.க்கள் இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தெரிவித்தோம். அப்போது, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை கட்டாயம் எடுக்கும் எனவும் முதல்வர் உறுதி அளித்தார். நாளை (இன்று) தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் முன்பு போராட்டமும் நாளை மறுநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

தொடர்ந்து, அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன் கூறுகையில், ‘‘இந்த மூன்று சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து உள்ளோம். இந்த சட்டங்களில் உள்ள சிக்கல்களை தெரிவித்துள்ளோம். இந்த புதிய சட்டப் பிரிவுகளில், குற்றவாளிக்கு ஆலோசனை கூறும் வழக்கறிஞருக்கும் தண்டனை என்று குறிப்பிட்டு உள்ளது. பல்வேறு முரணான விஷயங்கள் உள்ளன. இது தொடர்பாக கூட்டமைப்பின் சார்பில் அனைத்து மாநில முதல்வர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். நிரபராதிகளும் பொதுமக்களும் பாதிக்கக்கூடிய சூழல்களை இந்த சட்டம் உருவாக்கும். நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன’’ என்றார்.