விழுப்புரம் அருகே ஒருவர் பலியானது கள்ளச்சாராயத்தால் அல்ல: அமைச்சர் ரகுபதி!

விழுப்புரம் அருகே ஒருவர் உயிரிழந்தது கள்ளச் சாராயத்தால் இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

அண்மையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 200க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 65 பேர் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் சுவடு மறைவதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் அரசூர் அருகே கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் பலியானதாக தகவல் பரவியது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டு ஆளும் திமுக அரசை விமர்சித்திருந்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணமும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரமும் கண்ட பிறகும் எந்த பாடமும் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா ஸ்டாலின் அவர்களே? உங்கள் விடியா அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது? எனக் கேள்வி எழுப்பி இருந்தார் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன என்று எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி இச்சம்பவம் குறித்த முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளாமல் அவசர கதியில் வழக்கம்போல ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் (வயது 65), என்பவர் சாராயம் அருந்தி உடல்நிலை சரியில்லாமல் கடந்த 30.06.2024 அன்று மதியம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம், இருவேல்பட்டு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 29.06.2024 அன்று இரவு புதுச்சேரி மடுகரை அரசு சாராயக்கடையில் முருகன் என்பவர் 5 பாக்கெட்டுகள் சாராயம் வாங்கி 2 பாக்கெட்டுகளை தானே குடித்துவிட்டு ஜெயராமன் என்பவருக்கு இரண்டு பாக்கெட்டுகளையும், சிவசந்திரன் என்பவருக்கு ஒரு பாக்கெட்டையும் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இவர்களில், ஜெயராமன் என்பவர் உடல்நலம் சரியில்லாமல் இரண்டு நாட்களாக சாப்பிடாமல் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மேற்படி முருகன் என்பவர் புதுச்சேரி, மடுகரை அரசு சாராயக்கடை எண்.1-ல் சாராயப் பாக்கெட்டுகளை வாங்கியது உண்மை என்று தெரியவந்துள்ளது. முருகன் மற்றும் சிவசந்திரன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் 30.06.2024 அன்று இரவு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்து மூவரின் ரத்த மாதிரிகளையும் விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், அவர்கள் அருந்தியது எத்தனால் (Ethanol) என்றும், மெத்தனால் எதுவும் இல்லை என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் மேற்படி இருவரும் நல்ல நிலையில் 3.7.2024 அன்று மதியம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜெயராமன் என்பவர் அதிக அளவு மதுப்பழக்கம் உள்ளவர் என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 4) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் என்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக சாராயப் பாக்கெட்டுகளை வாங்கி வந்த முருகன் என்பவர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதான் நடந்தது. ஆனால் இதனை சரிபார்க்காமல், இச்சம்பவத்தை கள்ளச் சாரய மரணம் என்று கூறி இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர். எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி சாராயக் கடத்தலைத் தடுப்பதற்கு தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் ரோந்துப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உள்ளூர் காவல் துறையினர் எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எனவே, இந்த உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை என்று உறுதியாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.