ஜூலை 10 முதல் தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ஜூலை 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தொகுதி வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்தித்தது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்தது. அதிமுக 33 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்தித்தது. அதிமுக கூட்டணிக்கு புரட்சி பாரதம் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, தமிழ் மாநில முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவளித்துள்ளன. ஆனால் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. 7 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு, 9 தொகுதிகளில் 3-ம் இடம், ஒரு தொகுதியில் 4-ம் இடம் என மோசமான நிலைக்கு சென்றது.

பழனிசாமி தலைமையில் தொடர்ந்து 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி முகமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் பழனிசாமி, வரும் 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசிக்க உள்ளார்.

அதன்படி, 10-ம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், 11-ம்தேதி சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம், 12-ம் தேதி அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி, 13-ம் தேதி சிதம்பரம், மதுரை, பெரம்பலூர், 14-ம் தேதி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, 16-ம் தேதி ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், 17-ம் தேதி தென்காசி, தேனி, திண்டுக்கல், 18-ம் தேதி பொள்ளாச்சி, நீலகிரி, கோவை, 19-ம்தேதி விழுப்புரம், கன்னியாகுமரி, ஆரணி ஆகிய தொகுதிதேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தலைமை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள்,முன்னாள் அமைச்சர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.