ரவுடிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு பெரம்பூரில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தனது வீடு அருகே நின்றுகொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை உணவு டெலிவரி செய்யும் உடை அணிந்து வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டிச் சரித்துவிட்டு அங்கிருந்து தப்பினர். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொது வெளியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுதொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 8 பேரை கைது செய்த காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் மறைவு தொடர்பாக காவல் துறை மீது கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞர் ஆம்ஸ்ட்ராங் மிகக் கொடூரமான முறையில் சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இப்படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை கொலைக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். இதுபோன்ற படுகொலை சம்பவங்களை தடுக்கவும், தொழில்முறை கூலிப் படையினர்களின் அட்டகாசத்தை அடக்கி ஒடுக்கவும் காவல் துறை, உளவுத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு ரவுடிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும்.

சென்னை மாநகர் உள்பட தமிழகம் முழுவதும் சட்டம் – ஒழுங்கை சீர்கெடுக்கும் முறையில் செயல்படும் தொழில்முறை ரவுடிகள், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.