தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை: காவல்துறை எச்சரிக்கை!

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வேலைவாய்ப்பு குறித்து பிராந்திய செய்தித்தாள்களில் ஏதேனும் விளம்பரங்கள் வந்தால், அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க உள்ளூர் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

தமிழக காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சமீப காலங்களில், இந்தியாவில் இருந்து 20 முதல் 24 வயதுக்குட்பட்ட பல இளைஞர்கள் கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு நாடுகளுக்கு லாபகரமான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்து ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் ஆன்லைன் விளம்பரங்கள் மூலமாகவோ அல்லது சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவோ வேவை வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்த இளைஞர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் அல்லது அதுபோன்ற பதவிகள் போன்ற முறையான வேலைவாய்ப்புகளை சாக்காக வைத்து பணியமர்த்தப்படுகிறார்கள்.

இருப்பினும், அங்கு சென்றவுடன் அவர்கள் இணைய அடிமைத்தனத்துக்கு தள்ளப்பட்டு, போலியான சமூக ஊடக சுயவிவரங்களை உருவாக்கி மக்களை ஏமாற்றுதல் ஃபெட்எக்ஸ் (FedEx) மோசடிகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமில்லாத நபர்களை ஏமாற்றுவதற்கான மோசடித் திட்டங்களில் ஈடுபடுதல் போன்ற சட்டவிரோத இணைய நடவடிக்கைகளில் பங்கேற்க வைக்கப்படுகிறார்கள்.

சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்களின் செயல்பாடுகளை தமிழக காவல்துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும், இந்த இணைய அடிமைத்தனம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு சார்பில், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் குறித்த முழுமையான விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தமிழக காவல்துறை வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலரை அணுகுவதன் மூலம் வேலையின் தன்மை மற்றும் முகவரின் சுயவிவரத்தை முழுமையாக சரிபார்க்கவேண்டும். வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்ப, பதிவு செய்யப்பட்ட முகவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஒருவர் வேலைவாய்ப்பு அல்லது பணி விசாவில் மட்டுமே பணி நிமித்தமாக பயணம் செய்ய வேண்டும். சுற்றுலா விசாவை பயன்படுத்த கூடாது.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வேலைவாய்ப்பு குறித்து பிராந்திய செய்தித்தாள்களில் ஏதேனும் விளம்பரங்கள் வந்தால், அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க உள்ளூர் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.