கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி!

தமிழக அரசு வைத்த கோரிக்கையை ஏற்று மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக நினைவு நாணயம் வெளியிட மத்திய நிதி அமைச்சகம் சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுமதி வழங்கி உள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்தாள் கடந்த ஓராண்டாக தமிழகத்தில் திமுகவினர் கொண்டாடி வந்தனர். இதையொட்டி ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது. அதாவது இந்தியாவில் புகழ்பெற்ற தலைவர்கள், முக்கிய நிகழ்வுகளின் நினைவாக நாணயம் என்பது மத்திய நிதி அமைச்சகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கருணாநிதிக்கும் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு சார்பில் மத்திய நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது ரூ.100 மதிப்பில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவு நாணயம்வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக முதல்வர் முகஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு அனுமதி கோரப்பட்டது. கடந்த ஜுன் 3ம் முடிந்த கருணாநிதியின் நூறாவது பிறந்தநாள் விழாவில் வெளியிடும் முயற்சியில் இந்த அனுமத கோரப்பட்டது. ஆனால் அனுமதி என்பது உடனடியாக கிடைக்கவில்லை. நினைவு நாணயத்திற்கான நடைமுறைகள் முடிவடையாததால் மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் தான் தற்போது அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்துள்ள நிலையில் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அனுமதியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தந்தார். இதற்கான உத்தரவு என்பது விரைவில் கெஜட்டில் வெளியாக உள்ளது. இந்த நினைவு நாணயத்தில் ‘டாக்டர் கலைஞர் மு கருணாநிதி’ என்றபெயருடன், ‘தமிழ் வெல்லும்’ எனும் வாசகம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற உள்ளது. மத்திய அரசு இந்தியை திணிப்பதாக திமுக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் கருணாநிதியின் நினைவு நாணயத்திலும் இந்தி மொழி இடம்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.