இடைத்தேர்தல் முடிவுகளால் பாஜக பின்னிய ‘அச்ச வலை’ அறுந்துவிட்டது: ராகுல் காந்தி

பாஜக பின்னியிருந்த ‘அச்சம், குழப்பம்’ என்ற வலை அறுந்துவிட்டதையே, 7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

பாஜக பின்னியிருந்த ‘அச்சம், குழப்பம்’ என்ற வலை அறுந்துவிட்டது என்பதையே 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், ஊழியர்கள் என ஒவ்வொரு வர்க்கமும் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக அழித்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகிறது. பொதுமக்கள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் இண்டியா கூட்டணியுடன் முழுமையாக நிற்கின்றனர். ஹிந்துஸ்தான் வாழ்க! இந்திய அரசியலமைப்பு வாழ்க! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இடைத்தேர்தல் முடிவுகளை அடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளன. இத்தகைய முடிவுகளை வழங்கிய பொதுமக்கள் முன் தலைவணங்குகிறோம். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. பாதகமான சூழ்நிலையிலும் கடுமையாக உழைத்த காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவிக்கிறேன். பாஜகவின் ஆணவத்தையும், தவறான நிர்வாகத்தையும், எதிர்மறை அரசியலையும் பொதுமக்கள் தற்போது முற்றாக நிராகரித்துள்ளதையே இந்த வெற்றி காட்டுகிறது. மோடி-அமித் ஷா அரசியல் நம்பகத்தன்மை குறைந்து வருவதற்கு இது ஒரு வலுவான சான்று” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.