ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது: எடப்பாடி பழனிசாமி!

“ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் மீது என்கவுன்ட்டர் நடந்திருப்பதில் சந்தேகம் உள்ளது. சரணடைந்தவரை அதிகாலை நேரத்தில் அவசரமாக அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏன்?. அவர் மறைத்து வைத்த ஆயுதத்தை கைப்பற்ற அழைத்துச் சென்றதாக கூறுகிறார்கள்.

கொலை குற்றவாளிகளை அழைத்துச் செல்லும்போது கைவிலங்கு அணிந்து தான் அழைத்து செல்ல வேண்டும் என்பது விதி. அப்படியிருக்கையில் பாதுகாப்புடன் திருவேங்கடம் அழைத்துச் செல்லப்பட்டாரா?.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேரும் உண்மையான குற்றவாளிகள் தானா என அவரது உறவினர்களும், கட்சியினரும் சந்தேகம் எழுப்பிய நிலையில், இப்படியான என்கவுன்ட்டர் நடந்திருப்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது” என்று கூறினார்.

மேலும் இது தொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களுள் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது?

கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா? யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரும் அவரது கட்சியினரும் சந்தேகிக்கும் நிலையில், காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்கிறது.

இந்த வழக்கு தொடர்பாக திருவேங்கடம் அளித்த வாக்குமூலம் முழுவதுமாக சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்! இவ்வழக்கின் விசாரணை மீது நம்பிக்கை இழந்து கொண்டே போவதால், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கைக்கிணங்க இதனை சிபிஐக்கு மாற்றவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.