பாஜக எதிர்மறை அரசியலில் ஈடுபடுவதில் ஆச்சரியம் இல்லை: பிரியங்கா காந்தி!

“அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள், அதனை மாற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ எனக் குறிப்பிட்டு எதிர்மறை அரசியலில் ஈடுபடுவதில் ஆச்சரியம் இல்லை” என்று பாஜகவை பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை, “மத்திய அரசு ஜூன் 25, 1975 அன்று அவசரநிலையை பிரகடனப்படுத்தப்பட்ட நாளை அரசியலமைப்பு படுகொலை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளை சகித்த அனைவரின் மகத்தான பங்களிப்பையும் நினைவுகூரும்” என்று அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

இந்தியாவின் மகத்தான மக்கள் சுதந்திரம் மற்றும் இந்த அரசியலமைப்பை அடைய ஒரு வரலாற்று யுத்தத்தை நடத்தினர். அரசியலமைப்பை உருவாக்கியர்கள், அரசியலமைப்பின் மீது நம்பிக்கை உடையவர்கள், அதனை பாதுகாப்பார்கள். அரசியலமைப்பு அமலாக்கப்படுவதை எதிர்த்தவர்கள், அரசியலமைப்பை ஆய்வு செய்ய குழு அமைத்தவர்கள், அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தவர்கள், தங்களின் முடிவுகள் மற்றும் செயல்களால் அரசியலமைப்பின் ஆன்மா மற்றும் ஜனநாயகம் மீது தொடந்து தாக்குதல் நடத்தியவர்கள், எதிர்மறை அரசியலாக அரசியலமைப்பு படுகொலை தினம் அனுசரிப்பதில் ஆச்சரியம் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.