விக்கிரவாண்டி தேர்தல் பணபலம், அதிகார பலத்திற்கு கிடைத்த வெற்றி: ஜி.கே. வாசன்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலத்திற்கு கிடைத்த வெற்றி எனவும், பல தவறான யுக்திகளை கையாண்டு வெற்றி பெற்றுள்ளதாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனை அடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது. மொத்தம் 29 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட நிலையில் ஜூலை 10 ஆம் தேதி விக்ரவாண்டி தொகுதி வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் ஓட்டு போட்டது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஜூலை 13ஆம் தேதி காலை எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. மொத்தம் 798 தபால் ஓட்டுகள் பெறப்பட்ட நிலையில் இவற்றில் பெரும்பாலான ஓட்டுகள் திமுக வேட்பாளராக போட்டியிட்ட அன்னியூர் சிவாவிற்கே சாதகமாக இருந்தது. காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் 14 மேஜைகள் போடப்பட்டு 20 சுற்றுகளாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்த நிலையில், மொத்த ஓட்டுகளும் எண்ணப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பாமகவிற்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மக்களவைத் தேர்தலில் அதிகமாக வாக்குகளை பெற்று தேசிய கட்சிகளாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு இந்த சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மிகக் கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுகவின் இந்த வெற்றிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவின் பணபலம் மற்றும் அதிகார பலத்திற்கு கிடைத்த வெற்றி எனவும், ஆளும் திமுக அரசு தவறான யுக்திகளை கையாண்டு இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், இவை அனைத்திற்கும் வருகின்ற 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.