இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேருக்கு காவல் நீட்டிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர்களுக்கு ஜுலை 24 வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஜுன் 23 அன்று கடலுக்குச் சென்ற ஜஸ்டின், ரெய்மெண்ட், ஹெரின் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகுகளிலிருந்த 22 மீனவர்களை கைது செய்தனர். இவர்கள் மீது, எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) அவர்கள் 22 பேரும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் (வீடியோ கான்பரன்சிங் மூலம்) ஆஜர்படுத்தப் பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், மீனவர்களின் காவலை ஜுலை 24 வரையிலும் நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து தமிழக மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.