சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன்!

சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. வேறு ஏதேனும் வழக்கில் சவுக்கு சங்கர் சிறைப்படுத்தப்பட்டிருந்தார் என்றால் அதற்கு இந்த இடைக்காலப்பினை பொருந்தாது எனவும் நீதிபதிகள் கூறி உள்ளனர்.

யூடியூபரும், மூத்த பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தயார் கமலா டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்து இருந்தார். இந்த மனு கடந்த ஜூலை 15ஆம் தேதி அன்று நீதிபதிகள் சுதாஷசுரியா, ஏ.அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் மீதான வழக்கின் பின்னணியை கேட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கரை ஏன் இடைக்காலமாக விடுவிக்க கூடாது. அவரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கையில், சவுக்கு சங்கரை விடுவித்தால் பொது ஒழுங்கு கெடும், அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.

இன்றைய தினம் நடைபெற்ற வழக்கில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. மேலும் இந்த ஜாமீன் உத்தரவு இந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டும்தான் என்றும் மற்ற வழக்குகளுக்கு இது பொருந்தாது என்றும் நீதிபதிகள் தெளிவுப்படுத்தி உள்ளனர். சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் என்பது தடுப்பு காவல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை மட்டுமே எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர். வேறு ஏதேனும் வழக்கில் சவுக்கு சங்கர் சிறைப்படுத்தப்பட்டிருந்தார் என்றால் அதற்கு இந்த இடைக்கால ஜாமீன் பொருந்தாது எனவும் நீதிபதிகள் கூறி உள்ளனர்.

முன்னதாக யூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர், ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் அதன் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு அளித்த பேட்டியில், “காவல்துறையில் பணியாற்றும் பெண்காவலர்கள்” குறித்து பேசிய கருத்து சர்ச்சை ஆனதால் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது குறித்து பேசிய அவரது வழக்கறிஞர் கே.கோபாலகிருஷ்ணன், சிறை அதிகாரிகள் சவுக்கு சங்கரை காவலில் வைத்து சித்திரவதை செய்ததாக கூறினார். மே 4ம் தேதி இரவு துணியில் சுற்றப்பட்ட பிளாஸ்டிக் பைப்களால் சிறை அதிகாரிகள் சங்கரை தாக்கியதாக வழக்கறிஞர் குற்றம் சாட்டி இருந்தார்.
அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசாரும், திருச்சி சைபர் கிரைம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இது மட்டுமின்றி அவரது வீடு மற்றும் அலுவலங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சவுக்கு சங்கர் சங்கர் கஞ்சா பயன்படுத்தியதாக கூறி மேலும் ஒரு வழக்கை பதிவு செய்து இருந்தனர். மேலும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாக ரெட்பிக்ஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் காவல்துறையினர் கைது செய்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி சவுக்கு சங்கர் மீதும், பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.