மாவட்ட செயலர்களுடன் டிடிவி தினகரன் 24-ம் தேதி தேனியில் ஆலோசனை!

அமமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரும் 24-ம் தேதி தேனியில் ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அமமுக, தேனி, திருச்சி தொகுதிகளில் போட்டியிட்டு, தோல்வியடைந்தது. தேர்தலில் தோல்விக்கான காரணங்கள், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராவது மற்றும் கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிப்பதற்காக, வரும் 24-ம்தேதி தேனியில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக கட்சித்தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமமுக மாவட்ட செயலாளர்கள்,தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் வரும் 24-ம் தேதி காலை 9 மணிக்கு தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் உள்ள சந்திரபாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், கட்சி சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.