இனிமேல் எஸ்சி வகுப்பினர் ஒருவர் கூட உயர் பதவிக்கு வர முடியாது: ரவிக்குமார்

உச்சநீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, தமிழ்நாட்டில் எஸ்சி அரசு அதிகாரிகள் பதவி இறக்கப்படுவதாகவும், இப்படியே போனால் இனிமேல் எஸ்சி வகுப்பைச் சேர்ந்த ஒருத்தர் கூட உயர் பதவிக்கு வர முடியாது. இதைத் தமிழ்நாடு அரசு தடுக்க முடியாதா? என்று விழுப்புரம் தொகுதி எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளருமான ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

விழுப்புரம் தொகுதி எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளருமான எழுத்தாளர் ரவிக்குமார் பதவி இறக்கப்படும் எஸ்சி அரசு அதிகாரிகள் என்ற தலைப்பில் எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ரவிக்குமார் கூறியுள்ளதாவது:-

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு கடைபிடித்துவந்த ரோஸ்டர் முறையை எதிர்த்து ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அளிக்கப்பட்ட உத்தரவைக் காரணமாகக் காட்டி எஸ்சி அரசு அதிகாரிகளின் பதவி உயர்வைப் பறித்து அவர்களைக் கீழிறக்கம் செய்கிறது தமிழ்நாடு அரசு. இதைத் தடுப்பதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ளதைப்போல சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனக் கடந்த ஆண்டு இதே நாளில் அமைச்சர் கயல்விழி அவர்களிடம் மனு அளித்தேன். ஆனால் அந்த அநீதி இதுவரை நிறுத்தப்படவில்லை.

விசிக சார்பில் தலைவர் திருமாவளவனும், நானும் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளிடத்தில் இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்தோம். அத்துடன் முதலமைச்சர் அவர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். இப்போதுகூட வேளாண் துறையில் 39 துணை இயக்குநர்கள் பதவி இறக்கம் செய்யப்படுகின்றனர் என்றும் அதில் 37 பேர் எஸ்சி வகுப்பினர் என்றும் அறிகிறேன். இப்படியே போனால் இனிமேல் எஸ்சி வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கூட உயர் பதவிக்கு வர முடியாது. இதைத் தமிழ்நாடு அரசு தடுக்க முடியாதா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு அமைச்சர் கயல்விழியிடம் மனு அளித்திருந்த விழுப்புரம் எம்பி ரவிக்குமார் அதையும் தற்போது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பின்னடைவு காலிப் பணியிடங்கள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அதில் ரவிக்குமார் கூறியுள்ளதாவது:-

‘பின்னடைவு காலிப் பணியிடங்கள்: ‘எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கென ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் பின்னடைவாக உள்ள காலிப் பணியிடங்களைக் கணக்கெடுப்புச் செய்து நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என 2021 ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு எந்தப் பணியிடமும் இதுவரை நிரப்பப்படவில்லை. ஆதி திராவிட மக்களுக்கான தாட்கோ நிறுவனத்தில் 30, ஜூன் 2022 நிலவரப்படி அந்தத் துறைக்கு ஒதுக்கப்பட்ட 616 பணியிடங்களில் 469 பணியிடங்கள் காலியாக உள்ளன. 68 பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித்துறையிலும், உயர்கல்வித் துறையிலும்தான் அதிக எண்ணிக்கையில் பின்னடைவு காலிப் பணியிடங்கள் (Backlog vacancies ) உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு குறித்தும் கோரிக்கை வைத்திருந்தார். அதில், “பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இதுவரை தமிழ்நாடு அரசு கடைபிடித்துவந்த ரோஸ்டர் முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணையால் தற்போது ஆயிரக் கணக்கான எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் பதவி கீழிறக்கம் செய்யப்படுகின்றன. எஸ்சி எஸ்டி பிரிவினரின் பதவியைப் பாதுகாக்க உடனடியாக அவசர சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு இயற்றவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்த கோரிக்கை குறித்து தான் தற்போது மீண்டும் பதிவிட்டுள்ளார்.