எங்களை 25 தொகுதிகளிலும் ஜெயிக்க வைத்திருக்க வேண்டும்: அன்புமணி

ஒரு பட்ஜெட் என்றால் இந்தியாவுக்கு பொதுவானது. தமிழ்நாட்டுக்கு இதுதான். கேரளாவுக்கு இதுதான் என்று தனித்தனியே பெயர் சொல்ல முடியாது. பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் வந்திருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு 25 எம்பிக்களை ஜெயித்து கொடுத்திருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பாஜக கூட்டணியில் உள்ள முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஆட்சி செய்யும் பீகார் மற்றும் முதல்வராக சந்திரபாபு நாயுடு ஆட்சி செய்யும் ஆந்திரா மாநிலங்களுக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் தமிழ்நாட்டுக்கு பிரத்யேகமாக எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கோபமடைந்துள்ளன. தமிழகத்தை திமுக ஆட்சி செய்யும் நிலையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வென்றதால் தான் மத்திய பாஜக அரசு இப்படி நடந்து கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

இந்நிலையில் தான் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு பிரத்யேகமாக எந்த திட்டமும் அறிவிக்கப்படாதது பற்றி பாமக தலைவர் அண்புமணி ராமதாஸிடம் கேள்வி கேட்கப்பட்டது. பாஜக கூட்டணியில் பாமக உள்ள நிலையில் சென்னை திருவான்மியூரில் வைத்து அன்புமணி ராமதாஸிடம் இதுபற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அன்புமணி ராமதாஸ் ‛இந்த பட்ஜெட் 48 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட். இந்த 48 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என்று எதுவும் வந்திருக்காதா?” என்று பதில் கேள்வி கேட்டார்.

இதையடுத்து பத்திரிகையாளர் ஒருவர், ‛‛தமிழ்நாட்டுக்கு என்று தனியாக எதுவும் அறிவிக்கவில்லை” என்று கேட்டார். அதற்கு அன்புமணி ராமதாஸ், ‛‛தனியாக பெயர் சொல்ல முடியாது. ஒரு பட்ஜெட் என்றால் இந்தியாவுக்கு பொதுவானது தான். தமிழ்நாட்டுக்கு இதுதான். கேரளாவுக்கு இதுதான். கர்நாடகாவுக்கு இதுதான் என்று பெயர் சொல்ல முடியாது. பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் வந்திருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு 25 எம்பிக்களை ஜெயித்து கொடுத்திருக்க வேண்டும்” என காட்டமாக கூறினார்.

இந்த வேளையில் ‛‛இதுதான் காரணமா சார்” என்று பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு அன்புமணி ராமதாஸ், ‛‛காரணம் அதுவல்ல.. நான் சும்மா சொல்கிறேன். உண்மையில் வருத்தமாக தான் இருக்கிறது. இன்னும் ஒருநாள் கழித்து பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு ஒதுக்கி உள்ளார்கள் என்பதை எடுத்து சொல்கிறேன். இதுதொடர்பாக டேட்டா எடுத்து கொண்டிருக்கிறேன். நாளை இதுபற்றி தெளிவுப்படுத்துகிறேன்” என கூறி சென்றார்.