குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநராக ஜின்னா நியமனம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநராக ஹசன் முகமது ஜின்னாவை நியமித்து உள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டின் குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநர் (Director of Prosecution) அவர்கள் 31.1.2024 அன்று சுய விருப்பின் அடிப்படையில் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தற்போது, மாநில குற்றவியல் அரசு தலைமை வழக்கறிஞர் (State Public Prosecutor) அவர்களை, குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநர் பதவியில் இந்த விடியா திமுக அரசு நியமித்துள்ளது.

பொதுவாக முந்தைய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின்படி தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட Asst. Prosecutor-ஆக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பதவி உயர்வின் மூலம் Director of Prosecution ஆக நியமிக்கப்படுவது மரபு. மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களைக் கடுமையாக எதிர்ப்பதாக ஒருபுறம் கூறிவிட்டு, மத்திய அரசு கொண்டு வந்த புதிய குற்றவியல் சட்டப்பிரிவு 20(2)(a) Bharatiya Nagarik Suraksha Sanhita 2023ன் படி, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட வழக்கறிஞர் திரு. ஹசன் முகமது ஜின்னா அவர்களை, குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநர் (பொறுப்பு)-ஆக (Director of Prosecution Incharge) நியமித்திருப்பது விந்தையானது. அரசு துறையின் தலைவராக அரசியல் சார்புள்ள ஒருவரை இந்த விடியா திமுக அரசு நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது தவறான முன்னுதாரணமாகும்.

ஒருபுறம் மத்திய அரசு கொண்டு வந்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை எதிர்ப்பதும், ஆர்ப்பாட்டம் செய்வதும், உண்ணாவிரதம் இருப்பதும், மறுபுறம் தனக்குச் சாதகமான உட்பிரிவை பயன்படுத்திக்கொள்வதுமாக திமுக தனது இரட்டை வேடத்தை அரங்கேற்றியுள்ளது. ஏற்கெனவே, பல ஆண்டுகளாக இந்த இயக்குநரகத்தில் பணிபுரியும் மூத்த அலுவலர்களுடைய நியாயமான பணி உயர்வு இதனால் பாதிப்படைந்துள்ளது. எனவே, அரசியல் சார்புள்ள வழக்கறிஞர் ஒருவரை குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநர் பதவிக்கு நியமிக்கக்கூடாது என்றும், வழக்கறிஞர் திரு. ஹசன் முகமது ஜின்னா அவர்களை அப்பதவியிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் விடியா தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.