சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தின் சிறந்த திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை சந்தியா தேவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை விருது வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சாபில் திருநங்கககளின் நலனிற்காக சிறப்பான முறையில் பணி புரிந்ததற்கான 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினையும், ஊக்கத் தொகையையும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சந்தியா தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் பணிபுரிந்து, அவர்களுக்கு முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15ஆம் நாளில் அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு 2021 முதல் விருதும், ரூ. ஒரு லட்சம் காசோலையும் வழங்கப்பட்டு வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவி அவர்கள் பூ கட்டும் தொழில் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். வில்லிசையில் ஆர்வம் ஏற்பட்டு புராணக் கதைகளை படித்து தன் தனித் திறமையால் 1000-க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் நடத்தியுள்ளார். வரதட்சணை தடுப்பு, கொரோனா விழிப்புணர்வு, சமூக நலத் திட்டங்கள், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு நடத்தி வருகிறார்.

தோவாளையைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவனின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்றதுடன், 8 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியை தத்தெடுத்து பராமரித்து வருகிறார். இவ்வாறு திருநங்கைகள் சமூகத்துக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வரும் கன்னியாகுமரியை சேர்ந்த சந்தியா தேவி, 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.