கேரளாவில் இதுவரை இல்லாத, ஏற்படாத பேரழிவு ஏற்பட்டுள்ளது: பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளதாக மாநில வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

வயநாடு நிலச்சரிவு கேரளாவில் இதுவரை இல்லாத, ஏற்படாத பேரழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள வயநாடு பகுதியில் 57 செமீ மழை பெய்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கி காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்பு துறையினர், மீட்பு படையினருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ராணுவம், கடற்படை உள்ளிட்டவைகளும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. நிலச்சரிவின் காரணமாக பல இடங்களில் சாலைகள், மின் மாற்றிகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன. தற்போது போக்குவரத்து உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்மாற்றிகளும் நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்துள்ளன. மண் சரிவில் சிக்கியும், தீப்பிடித்து எரிந்தும் 6 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 350 வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய காவல்துறையில் உள்ள மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் அங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியது அவசியம். கோழிக்கோடு, திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சிறப்பு மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, திருவனந்தபுரத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். மீட்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அரசின் மீட்பு நடவடிக்கைகள் முழுமையடைய பாதிக்கப்பட்ட மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வயநாட்டில் 45 முகாம்கள் உள்பட கேரள மாநிலம் முழுவதும் 118 முகாம்களில் 5,531 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரம் குறித்துக் கேட்டறிந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். இவ்வாறு அவர் கூறினார்.