ராகுல் காந்திக்கு பா.ஜ.க-வைப் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை: வானதி சீனிவாசன்!

குடும்ப அரசியலில் மூழ்கி திளைக்கும் ராகுல் காந்திக்கு பா.ஜ.க-வைப் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

பா.ஜ.க. எம்.ல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (29.7.2024) 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிப்பு, முதலாளிகளுக்கான பட்ஜெட் என, எப்போதும் பேசுவதையே பேசியுள்ளார். அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை முன்வைப்பது, மக்களின் கருத்துகளை, கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதுதான் எதிர்க்கட்சித் தலைவரின் பணி. துருதிருஷ்டவசமாக ராகுல் காந்தியின் பேச்சில் இந்த ஆரோக்கியான போக்கு வெளிப்படவில்லை.

மாறாக “தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாமல் போய் விட்டதே, 55 ஆண்டுகளாக ஆண்ட, ஐந்து தலைமுறை குடும்பத்தை, மிகவும் பிறப்படுத்தப்பட்ட, ஏழை குடும்பத்தில் பிறந்த, தேநீர் விற்ற பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வர முடியாமல் தடுத்து விட்டாரே” என்ற ஆதங்கம்தான் வெளிப்படுகிறது. நான் யார் தெரியுமா, என் பரம்பரை தெரியுமா என்ற ஆதிக்க மனப்பான்மையில்தான் ராகுல் காந்தி பேசி வருகிறார். அவருக்கு எளிய குடும்பத்தில் பிறந்த, எந்தப் பின்னணியும் இல்லாமல் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகி இருப்பதை ஜீரணிக்க முடியவில்லை.

அக்னிபாத் திட்டம் பற்றி காங்கிரஸ் கட்சி குறிப்பாக ராகுல் காந்தி தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார். ராணுவத்தில் அதிகமானோர் பங்கேற்கும் வாய்ப்பை உருவாக்கவே அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பை பொறுத்தவரை அனைத்தையும் ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் முடிவு செய்கிறது. மத்திய அரசு தனியாக எதையும் முடிவு செய்வதில்லை,

“பா.ஜ.க-வில் ஒருவர் மட்டுமே பிரதமராக முடியும். மற்றவர்களுக்கு அந்த உரிமை இல்லை” என ராகுல் பேசியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. நாட்டின் விடுதலைக்குப் பிறகு 75 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி கட்டுக்குள் வைத்திருக்கும் குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறை வாரிசான ராகுல், இதை பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். காங்கிரஸுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரோ அல்லது அவர்களால் நியமிக்கப்படும் ஒருவரோதான் வர முடியும்.

இப்போதும்கூட ராகுல் எதிர்க்கட்சி தலைவர். அவரது தாயார் சோனியா நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர். மாநிலங்களவை உறுப்பினர். ராகுலின் சகோதரி பிரியங்கா ராகுல் ராஜினாமா செய்த வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவித்துள்ளனர். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடந்தால் ‘அம்மா மகன் மகள்’ தான் பிரதானமாக அமர்ந்திருக்கின்றனர். இப்படி ஒரு கட்சியையே ஒரு குடும்பம் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

ஆனால், பாஜகவில் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். பிரதமாக வரலாம். 1996, 1998, 1999ல் பா.ஜ.க-வுக்கு வாய்ப்பு கிடைத்தபோது வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அவருக்கு பிறகு சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்த நரேந்திர மோடி பிரதமராகி இருக்கிறார். அவர் மன்மோகன் சிங்கைப் போல ஒரு குடும்பத்தால் நியமிக்கப்பட்டவர் அல்ல. மக்கள் ஆதரவுடன் தனது திறமையால் பிரதமரானவர் மோடி. 2014, 2019, 2024 என மூன்று மக்களவைத் தேர்தல்களிலும் அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திதான் வென்றிருக்கிறோம். மோடி பிரதமராகதான் வாக்களித்துள்ளனர். மக்கள் ஜனாயகத்திற்கு எதிரான வாரிசு, குடும்ப அரசியலில் மூழ்கி திளைக்கும் ராகுல் காந்திக்கு பா.ஜ.க-வைப் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.