என்னை, கருணாநிதியை தவறாக பேசுவதைத் தவிர வேறு ஒன்றும் சீமானுக்கு தெரியாதா?: விஜயலட்சுமி!

தம்மை திமுக தூண்டிவிடுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை போராட்டத்தின் போது பேசியதற்கு நடிகை விஜயலட்சுமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவை, என்னை, கருணாநிதியை தவறாக பேசுவதைத் தவிர வேறு எந்த ஒரு அரசியலுமே சீமானுக்கு தெரியாதா? எனவும் நடிகை விஜயலட்சுமி கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார். சென்னையில் நேற்று நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பேசிய சீமான், கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தி திமுகவையும் போலீசாரையும் கடுமையாக விமர்சித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை இழிவுபடுத்தக் கூடிய பாடலை 2 முறை பாடினார் சீமான். மேலும், அந்த “பெங்களூர்காரியை வைத்துக் கொண்டு 15 வருஷமான என்னமோ செய்து பார்த்தது திமுக” என நடிகை விஜயலட்சுமி குறித்தும் சீமான் விமர்சனம் செய்தார்.

சீமான் தம்மை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி பிரளயத்தை கிளப்பி இருந்தார். கடந்த ஆண்டு கூட சென்னையில் முகாமிட்டு சீமானுக்கு எதிராக பரபரப்பைக் கிளப்பி இருந்தார் விஜயலட்சுமி. பின்னர் வழக்கை வாபஸ் பெறுவதாக கூறி அவர் பெங்களூர் சென்றார். ஆனாலும் சீமானை தொடர்ந்து விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார் விஜயலட்சுமி. இந்த நிலையில் நேற்றைய சென்னை பொதுக் கூட்டத்தில் தம்மை பற்றி சீமான் பேசியதால் உடனே விஜயலட்சுமி புதிய வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சீமானை ஒருமையில் மிக மோசமான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். மேலும் தம்மையும் திமுகவையும் கருணாநிதியையும் இழிவுபடுத்தி பேசுவதைத் தவிர வேறு அரசியலே சீமானுக்கு தெரியாதா? எனவும் விஜயலட்சுமி கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன் கடந்த ஆண்டு பிரச்சனையின் போது கூட என் கணவர் என்றுதானே ரூ50,000 கொடுத்தார் சீமான்; அதை மறந்துவிட்டு சீமான் பேசலாமா? என கொச்சைவார்த்தைகளில் ஆவேசமாக பேசியிருக்கிறார் நடிகை விஜயலட்சுமி.