டெல்லி உயர் நீதிமன்றத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தள்ளுபடி!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக அர்விந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. இதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஜூலை 12-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், சிபிஐ பதிவு செய்துள்ள ஊழல் வழக்கு காரணமாக, கெஜ்ரிவால் தொடர்ந்து திகார் சிறையில் உள்ளார்.

இதையடுத்து, சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில், சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து, இடைக்கால ஜாமீன் கோரிய மனு மீதுநேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா கூறும்போது, “எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் கெஜ்ரிவாலை, சிபிஐ கைது செய்ததாக கூற முடியாது’’ என்று கூறி கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், ஜாமீன் தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தை கெஜ்ரிவால் நாடலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.