ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் கைது!

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அஸ்வத்தாமன் அளித்துள்ள வாக்குமூலம் பகீர் கிளப்பியுள்ளது. பிரபல தாதாவான ரவுடி நாகேந்திரனின் மகனான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் வரும் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி சென்னை பெரம்பலூரில் உள்ள தனது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அன்று இரவே சென்னை அண்ணா நகரில் உள்ள கே4 காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்தனர். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த காவல்துறை மொத்தம் 21 பேரை கைது செய்தது.

ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், ராமு, அருள், ஹரிஹரன், ஹரிதரன், மலர்கொடி வடசென்னை பெண் தாதா அஞ்சலை உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலரை காவலில் எடுத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையின் போது தப்பிக்க முயன்ற ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக சம்போ செந்தில் மற்றும் சீசிங் ரவி ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளிடம் நடத்திய விசாரணையில் இந்த கொலை வழக்கில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமனுக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து கடந்த மூன்று நாட்களாக அஸ்வத்தாமனிடம் விசாரணை நடத்தி வந்த போலீசார் நேற்று காலை அவரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பலர் பகீர் தகவல்கள் வெளியானது. அதாவது நிலத்தகராறு, கட்டப்பஞ்சாயத்து ஸ்கிராப் பிசினஸ் போன்றவற்றில் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையே பிரச்சனை இருந்தது தெரியவந்தது. இந்த பிரச்சனை காரணமாக ஒருமுறை அஸ்வத்தாமன் ஆம்ஸ்ட்ராங்கிடம் நேருக்கு நேர் துப்பாக்கியை காட்டி கொன்று விடுவதாக மிரட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதும் இதற்கு ஆர்ம்ஸ்ட்ராங் தடையாக இருந்ததால் திட்டம் போட்டு அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்ற மெஜிஸ்திரேட் ஜெகதீசன் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அஸ்வத்தாமன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை வரும் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறைக்கு அஸ்வத்தம்மன் அழைத்து செல்லப்பட்டார். மேலும் அஸ்வத்தாமனை போலீஸ் காவலில் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

வழக்கறிஞர் அஸ்வத்தாமன் பிரபல தாதாவான ரவுடி நாகேந்திரனின் மகன் ஆவார். மேலும் அஸ்வத்தாமன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு கட்சியினரும் கைது செய்யப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.