பிரதமர் மோடி மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும்: ஜெய்ராம் ரமேஷ்

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இன்று பிரதமர் வயநாடு சென்றுள்ளார். மணிப்பூருக்கும் அவர் சென்றால் நன்றாக இருக்கும்.

தற்போது நடைபெற்று முடிந்துள்ளது சிறிய நாடாளுமன்ற கூட்டத்தொடராகும். பட்ஜெட் தொடர்பான பிரச்னைகள் குறித்து இரு அவைகளிலும் எழுப்பப்பட்டன. இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் இரு அவைகளிலும் முக்கியமான பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சியினர் தீவிரமாக இருந்தோம். நாடாளுமன்றத்தில் பொதுமக்களின் பிரச்னைகளை திறமையாக விவாதித்தோம். பத்து ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக மக்கள் வலுவான எதிர்க்கட்சியினரை சந்திக்கிறார்கள். இந்த உண்மையைக் கண்டு அரசு பயப்படுகிறது.

பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதேயில்லை, நாடாளுமன்றத்திற்கு வரும் அமைச்சர்கள் பொய்யான தகவல்களை வழங்குகிறார்கள். பல்வேறு சமூகங்களை சேர்ந்த பிரதிநிதிகளை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார். அரசாங்கம் யார் சொல்வதையும் கேட்பதில்லை, ஆனால் ராகுல் காந்தி அனைவருடைய பேச்சையும் கேட்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.