ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி அடுத்த விசாரணை நடத்தப்படும் என்று சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான அவதூறு கருத்துகள் தொடர்பான வழக்கில் ராகுல் காந்தி மீது பாஜகவைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா சார்பில் வழக்கு தொடரப்பட்டு சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. பாஜக சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ராகுல் மறுத்துள்ளார். அரசியல் காரணங்களுக்காகவும், தன் பெயரைக் கெடுக்கும் நோக்கத்திற்காகவும் புனையப்பட்ட வழக்கு என்று அவர் கூறினார்

கடந்த ஜூலை 26-ல் ராகுல் காந்தி இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜரானார். இதையடுத்து ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெறவிருந்தது. எம்பி, எம்எல்ஏ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி சுபம் வர்மா விடுப்பில் இருப்பதால் இன்று விசாரணை நடைபெறவில்லை. மீண்டும் ஆகஸ்ட் 23ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.