தேவநாதன் யாதவை 28ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக கூட்டணி கட்சி தலைவர் தேவநாதனை வரும் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவராக இருக்கிறார் தேவநாதன் யாதவ். அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலில் சிவகங்கை லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் தேவநாதன். மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிட்ட்’ என்ற நிதி நிறுவனத்தை தேவநாதன் யாதவ் நடத்தி வருகிறார். தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 8 முதல் 12 சதவீதம் வரை வட்டி உறுதி என கவர்ச்சியான விளம்பரம் செய்ததை நம்பி தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் நிரந்தர வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்தனர். இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சமாக எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் செலுத்தும் பணத்திற்கு 8 முதல் 12 சதவீத வட்டி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் அதை நம்பி தமிழ்நாடு முழுவதும் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலும் ஏராளமானவர்கள் முதலீடு செய்துள்ளனர். ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வு தொகை மற்றும் வட்டி பணம் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தினமும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்கு சென்று பணம் கேட்டு முறையிட்டனர். ஆனால், உரிய பதில் கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட பலர் இது குறித்து காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப் பிரிவிலும் முறையாக புகார் அளித்தனர். ஆனால் நிதி நிறுவனம் சார்பில் இதுவரை முறையாக பதில் அளிக்காததால் கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி முதலீட்டாளர்கள் பலர் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பிரசாத் என்பவர் அளித்த புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து நேற்று திருச்சியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவை போலீசார் கைது செய்தனர். மேலும், இதே மோசடி வழக்கு தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநர்களான குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை இன்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். தேவநாதன் யாதவிடம் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பல கோடி‌ ரூபாய் குறித்து போலீசார் 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சென்னையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார் தேவநாதன். தேவநாதன் யாதவை வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.