சுதந்திரம் என்பது வார்த்தை அல்ல, பாதுகாப்புக் கவசம்: ராகுல் காந்தி

சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை அல்ல, பாதுகாப்பு கவசம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றினார். இந்த விழாவில், 10 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி இன்று காலை கலந்து கொண்டார்.

முன்னதாக நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் காணொலி ஒன்றை பகிர்ந்த ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:-

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திரம் என்பது நமக்கு வெறும் வார்த்தை அல்ல, மிகப்பெரிய பாதுகாப்புக் கவசமாகும். இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. உண்மை பேசும் திறன், கனவுகளை நிறைவேற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் சக்திதான் சுதந்திரம், ஜெய் ஹிந்த். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்ற பின், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்விலும் ராகுல் காந்தி பங்கேற்றார்.