அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்க 100 நாள் போராட்டத்தை தொடங்கியது காங்கிரஸ்!

அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம் என்ற பெயரில் 100 நாள்போராட்டத்தை டெல்லியில் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.

இந்த போராட்டத்தை காங்கிரஸ் எம்.பி. அஜய் மாக்கன் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்து கூறியதாவது:-

சம்விதான் ரக் ஷா (அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்) என்ற பெயரில் டெல்லி முழுவதும் இந்த 100 நாள் போராட்டம் நடத்தப்படும். வரும் நவம்பர் 27-ம்தேதி வரை டெல்லியின் 70 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இந்தப் போராட்டம் நடைபெறும். படிப்படியாக நாடு முழுவதும் போராட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்காக 3 லட்சம் விதான் ரக்ஷகர்கள் சேர்க்கப்பட்டு நாடு முழுவதும் அடுத்த 100 நாட்களுக்கு இந்த போராட்டம் நடைபெறும்.

சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்தைத் தடுக்க சில சக்திகள் அரசியலமைப்பு சட்டத்தை குலைக்கும் நோக்கத்தில் உள்ளன. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். எனவேதான், இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு அரசியலமைப்பால் வழங்கப்பட்ட அதிகாரத்தையும் சமத்துவத்தையும் பறிக்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக உள்ளது. இது அவர்களின் கனவிலும் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.