முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை: சித்தராமையா!

தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் இன்று (ஆக.17) ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சித்தராமையா கூறியதாவது:-

ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே, எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலுக்கு இணங்கி முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்ய முடியாது. எனக்கு எதிரான வழக்கை நீதிமன்றத்தில் சட்டரீதியாக சந்திப்பேன்.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை சீர்குலைக்க பாஜக, ஜேடி(எஸ்) மற்றும் பிற கட்சிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளன. அரசியல் நோக்கங்களுக்காக பாஜக, ராஜ்பவனை தவறாகப் பயன்படுத்துகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் கைப்பாவையாக ஆளுநர் இருக்கிறார். காங்கிரஸ் தலைமை எனக்கு ஆதரவாக உள்ளது. ஒட்டுமொத்த அமைச்சரவையும், அனைத்து எம்எல்ஏக்களும் எனக்கு ஆதரவாக உள்ளனர். அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் எனக்கு ஆதரவாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. பார்வதியின் கோரிக்கைப்படி மைசூருவில் உள்ள விஜயநகரில் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்ட‌து. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதில் ரூ.3,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜக, மஜத கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், டி.ஜே. ஆபிரகாம், பிரதீப் மற்றும் சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர், சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.