அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு 30கட்சிகள் ஆதரவு!

இலங்கையில் 30 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் மகா கூட்டணி ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தருவதாக ஒப்புதல் அளித்துள்ளன.

இலங்கையில் அடுத்த மாதம் 21ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே(38) அதிபர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். விக்ரமசிங்கேவிற்கு ஆதரவு அளிப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜபக்சேவின் கட்சி எச்சரித்துள்ளது. எனினும் அதிபர் ரணிலுக்கான ஆதரவு தொடர்ந்து பெருகி வருகின்றது. ஏற்கனவே சுமார் 100 எம்பிக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து 30 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் மகா கூட்டணி அவருக்கு ஆதரவு தருவதாக ஒப்புதல் அளித்துள்ளன.