314 சட்டவிரோத குவாரிகளை மூடி இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் 314 சட்டவிரோத குவாரிகளை மூடி, இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் நேற்று கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தால், பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.
தனியார் பள்ளிகளில், சம்பந்தம் இல்லாத அமைப்புகள் பயிற்சி அளிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகஅரசு அமைத்துள்ள சிறப்புக் குழு, தனது விசாரணையைத் தீவிரப்படுத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 314 சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து முதல்வரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம். சட்டவிரோத குவாரிகளை மூடி, இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அரசியல் தொடர்பு இல்லாமல் இதுபோன்ற குற்றங்கள் நடக்காது. வனவிலங்கு சரணாலயம் அமைத்துள்ளதாகக் கூறி, அப்பகுதியைச் சுற்றியுள்ள 164 கிராம மக்களுக்கு வனத் துறையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.