பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் ஊழல் உச்சத்தில் உள்ளது: காங்கிரஸ்!

பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த சத்ரபதி சிவாஜியின் சிலை, உடைந்த விவகாரத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “பாரதீய ஜனதா ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 4 அன்று மகாராஷ்டிரத்தின் ராஜ்கோட்டில் சத்ரபதி சிவாஜியின் சிலையை நரேந்திர மோடி திறந்து வைத்தார். சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு தற்போது மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை இடிந்து விழுந்தது. இவர்களின் ஊழலில் வரலாற்றில் இடம்பிடித்துள்ளவர்கள்கூட தப்பமுடியாத நிலையே உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை தினத்தையொட்டி பிரதமர் மோடி சிலையை திறந்து வைத்தார். இந்த 35 அடி உயரமுள்ள சிவாஜி சிலை இன்று திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. கடந்த 3 நாள்களாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், சிலை உடைந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.