ஸ்டாலினுடன் எடப்பாடியும் சேர்ந்து பொய் சொல்லி வருகின்றனர்: எச். ராஜா!

திமுக, அதிமுக இரண்டும் திராவிடன் ஸ்டாக். ஸ்டாலினுடன் எடப்பாடியும் சேர்ந்து மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என பொய் சொல்லி வருகின்றனர் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறினார்.

நெல்லையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை வந்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்கவுண்டர் திட்டமிட்ட கொலை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய சிவராமான் காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் போது எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்துள்ளார். அந்த எலி மருந்தை வாங்கிக் கொடுத்தது யார்?.
தமிழகத்தில் நடந்த முக்கிய குற்றங்களில் அதன் ஆதாரங்களை அழிக்கும் வகையில் தமிழக காவல்துறையின் செயல் உள்ளது. மோசமான குற்றங்களில் தீர்வு காணாமல் அந்த வழக்குகளை முடித்து வைக்கும் நிலையில் தமிழக காவல்துறையின் போக்கு உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கவலை அளிக்கும் செயலாக உள்ளது.

இந்து மத விஷயங்களில் அனாவசிய தலையீடுகள் மட்டுமல்லாது கோவிலுக்கு அனாவசிய செலவுகளையும் இந்து அறநிலைத்துறை செய்து வருகிறது. பழனி கோவிலில் நன்றாக இருக்கும் இடங்களையும் இடித்து கட்டுகின்றனர். பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துவதற்கு 1600 கோடி ரூபாய் அறநிலைத்துறை செலவு செய்வதாக தகவல்கள் வருகிறது. முத்தமிழ் முருகன் மாநாட்டை நாத்திக அரசு நடத்தி தவறான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

முதல்வர் பேசும்போது கருவறையில் சமத்துவம் கொண்டு வருகிறேன் என சொல்கிறார். இந்து மதத்தினர் இடையே பேதங்களை உருவாக்கி கலவரங்களை ஏற்படுத்தி அதன் மூலம் மதமாற்றங்களை செய்ய வழிபோட்டு கொடுப்பதை போல் தமிழக அரசு செயல்பட்டுவருகிறது. இந்து கடவுள்களை சிறிய தெய்வம் பெரிய தெய்வம் என பிரித்து பேதங்களை உருவாக்கும் சதித்திட்டத்தை திராவிட இயக்கங்கள் செய்து வருகிறது.

தமிழகத்தில் பேதம் இல்லாமல் பட்டியல் சமூகத்தினர் வரை கோவில்களில் அர்ச்சகராக உள்ளனர். தமிழக அரசு மக்கள் மத்தியில் கழகத்தை ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களை தெரிவிப்பது பேதங்களை உருவாக்கி மதமாற்றத்திற்கு வழிவகுக்கும் தீயநோக்கத்துடன் நடக்கிறது. கோவில் பணத்தை எடுத்து செலவு செய்வதற்காகவே மாநாடு நடத்துகிறார்கள். இந்து மாநாட்டில் இந்து மக்களுக்கு எதிரான கருத்துக்களை பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

முருகன் மாநாட்டில் கடவுளின் விக்ரகம் இருக்கும் இடத்தில் அமைச்சர் சக்கரபாணி அறநிலையத்துறை அதிகாரிகள் காலணி அணிந்து சென்றது கண்டிக்கத்தக்கது. இந்து மதத்தை அசிங்கப்படுத்தும் செயலில் அமைச்சரும் அதிகாரிகளும் நடந்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

திமுகவும் அதிமுகவும் இரண்டும் ஒன்று தான்.ஏ டி எம் கே என்பது ஆன்ட்டி டிஎம்கே. அதிமுக, திமுக ரெண்டுமே திராவிடன் ஸ்டாக். பொய் சொல்வதே இருவருக்கும் வேலை. மத்திய அரசு தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய்க்கு திட்டங்களாக கொடுத்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் அனைத்து சாலை திட்டங்களும் மத்திய அரசு நிதியிலிருந்து நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ரயில்வே துறைக்கு மட்டும் 6384 கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கும்போது கூட பல திட்டங்களை தொடங்குவதற்கு பிரதமர் நேரில் தமிழகம் வந்துள்ளார்.
மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என ஸ்டாலினுடன் எடப்பாடியும் சேர்ந்து கொண்டு பொய் சொல்லி வருகிறார். ஆன்மிகம் இல்லாத மாநாட்டிற்கு அறநிலையத்துறை ஏன் இவ்வளவு செலவு செய்தது.

முத்தமிழ் முருகன் மாநாடு என நடத்தி விட்டு தமிழ் பண்பாட்டு மாநாடு என எப்படி சொல்ல முடியும். ஆன்மீக மாநாடு இல்லை என்று சொன்னால் அறநிலையத்துறையின் பணம் செலவு செய்தது தவறு. அந்த பணத்தை அரசு திருப்பி கொடுக்க வேண்டும். ஆன்மீக மாநாடு மட்டுமல்ல என சொல்லிக் கொண்டு மாநாட்டிற்கு போஸ்டர் ஒட்டி காணொளி காட்சியில் பேசுவதற்கு கடவுள் பணம் தேவையா?. மக்கள் கோவிலுக்காக கொடுத்த பணத்தை எடுத்து மாநாடு நடத்தி விட்டு தமிழ் பண்பாட்டு மாநாடு என எப்படி சொல்லலாம். ஆண்டவனுக்கு உரிய பணத்தை செலவு செய்தால் ஆண்டவனுக்கான மாநாடு என ஒத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் உதயநிதியின் இந்து விரோத பேச்சுக்கு வழக்கு நடந்து வருகிறது.உதயநிதி ஸ்டாலின் இந்து மதத்தின் எதிரி. முருகன் மாநாட்டில் தமிழ் பண்பாட்டுக்கான மாநாடு என உதயநிதி ஸ்டாலின் பேசியது மதம் மாறிய கிறிஸ்தவர் இந்து மதத்தின் மீது தொடுக்கும் தாக்குதல். உதயநிதி போன்றோர் இந்து மதத்தை பற்றி பேசாமல் இருப்பதே திமுகவிற்கு நல்லது. இல்லையென்றால் மக்கள் பார்த்துக் கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.