விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா சர்ச்சை கருத்து: பாஜக கண்டனம்!

விவசாயிகள் போராட்டம் குறித்த கங்கனாவின் சர்ச்சை கருத்தை பாஜக கண்டித்துள்ளது.

பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜக எம்.பி கங்கனா பேசியிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் விவசாயிகளின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கங்கனா பேசியுள்ளார். ஒரு நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியை தனது எக்ஸ் பக்கத்தில் கங்கனா பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், “விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால், வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து தேசம் அறியாது. போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும், கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது, இல்லை என்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும்” என்று கங்கனா பேசியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம் குறித்த கங்கனாவின் சர்ச்சை கருத்தை பாஜக கண்டித்துள்ளது. கங்கானாவின் கருத்துக்கும் பாஜகவிற்கு எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கங்கனா ரனாவத்துக்கு கட்சி சார்பில் கொள்கை விஷயங்களை பேச அதிகாரம் இல்லை, அதற்கான அனுமதியும் அவருக்கு வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துக்களை கங்கனா தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கங்கனாவிற்கு அறிவுறுத்தியுள்ளோம்” என்று பாஜக தெரிவித்துள்ளது.