நாகை மீனவர்களை தாக்கி வலை, இன்ஜின் கொள்ளை!

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் கத்தி முனையில் தாக்குதல் நடத்தி ரூ.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்ஜின் மற்றும் மீன்பிடி வலைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் செருதூர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அதே ஊரைச் சேர்ந்த தங்கதுரை என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் தங்கதுரை, அவரது மகன் மணிகண்டன் மற்றும் கங்காதரன் ஆகிய மூன்று மீனவர்கள் நேற்று (திங்கள்கிழமை) கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் கோடியக்கரை அருகே வலை விரித்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மூன்று அதிவேக படகுகளில் அங்கு வந்த 10 இலங்கை மீனவர்கள், நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் கத்தி, ரப்பர் தடியுடன் படகில் ஏறிய இலங்கை மீனவர்கள், நாகை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அத்துடன் படகில் இருந்த சுசுகி இன்ஜின், 500 கிலோ வலை, வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, செல்போன், மீனவரின் இடுப்பில் இருந்த வெள்ளி அரைஞாண் கயிறு என ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தில் செருதூர் மீனவர்கள் மூவருக்கும் கை கால்களில் வெட்டு காயங்களும், உடலில் ஊமைக்காயங்களும் ஏற்பட்டன. இதையடுத்து படகில் இருந்த மற்றொரு இன்ஜினை இயக்கி பாதிக்கப்பட்ட செருதூர் மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கரை வந்து சேர்ந்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள இன்ஜின் மற்றும் வலைகளை இலங்கை மீனவர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட செருதூர் மீனவர்கள் நாகை மீனவளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வரும் சம்பவம், நாகை மாவட்ட மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக மீனவர்களின் ஒரு விசைப்படகை சிறைப்பிடித்து அதிலிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் சூறைக் காற்று வீசியதால் கடந்த ஒரு வார காலமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 450 விசைப்படகுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை மரியசியா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கிங்சன் (40), மெக்கன்ஸ் (37), ராஜ் (43), இன்னாசி ராஜா (45), சசி (40), மாரியப்பன் (45 ), அடிமை (33), முனியராஜ் ( 23) ஆகிய எட்டு பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டியதாக குற்றஞ்சாட்டி ரோந்தில் இருந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இன்று பிற்பகல் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

முன்னதாக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 46 தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்து 341 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.