திமுக ஆட்சி பொறுப்பேற்று 39 மாதங்களில் 2 ஆயிரம் குடமுழுக்கு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு!

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 1,983 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு பெற்றிருக்கிறது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

புரசைவாக்கம் கங்காதேசுவரர் கோயிலில் ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 1,983 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு பெற்றிருக்கிறது. 28-ம் தேதி (இன்று) 11 கோயில்களுக்கும், 30-ம் தேதி 9 கோயில்களுக்கும் குடமுழுக்கு நடைபெறும். திமுக ஆட்சி பொறுப்பேற்று 39 மாதங்களில் 2 ஆயிரம் குடமுழுக்கு நடத்துவது என்பது மிகப்பெரிய சாதனை.

பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டை அரசியலுக்காக கையில் எடுத்ததாக ஒருசிலர் கூறி வருகின்றனர். ஆட்சி அமைந்ததில் இருந்து முருகன் கோயிலில் ஏராளமான திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்துக்கு உட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள்தான் சமயம் சார்ந்த வகுப்புகளை தொடங்குவதாகவும், போட்டிகளை நடத்தி பரிசளிப்பதாகவும் கூறியுள்ளோம். இதுகுறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி.,க்கு விளக்கமளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.