முருகன் மாநாட்டைத் தொடர்ந்து ”அம்மன் மாநாடு”: அமைச்சர் சேகர்பாபு!

தமிழ்நாட்டில் முருகன் மாநாடு நடத்தப்பட்டதைப் போல தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை சார்பாக அம்மன் மாநாடு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

பழநியில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக 2 நாட்கள் முருகன் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை என்பது கோவில் நிர்வாகத்துக்கானதே தவிர, இந்து மதத்தைப் பரப்புகிற பணிகளை செய்யக் கூடாது என திமுகவின் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திமுகவை தொடர்ந்து ஆதரிக்கும் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியவையும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முருகன் மாநாட்டின் சர்ச்சைக்குரிய தீர்மானங்களை இந்துசமய அறநிலையத்துறை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முருகன் மாநாட்டைத் தொடர்ந்து “அம்மன் மாநாடு” நடத்தப் போவதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:-

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மன் திருக்கோவில்களில் முதன் முதலில் 108 சுமங்கலி பூஜை நடத்தப்பட்டது. அம்மன் கோவில்களில் விளக்கு பூஜையை தொடங்கியது இந்த ஆட்சி. விளக்கு பூஜைக்கு ஒருவருக்கு ரூ1,000 என செலவு வைத்துள்ளோம். மாதந்தோறும் 108 பெண்களுக்கு 17 திருக்கோவில்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அம்மன் கோவில்களைப் பொறுத்தவரை இந்த ஆட்சி அதிக அக்கறையோடு, அம்மன் கோவில் திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தியது இந்த ஆட்சிதான். ஆகையால் அம்மன் மாநாடு நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.