ராமேசுவரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்!

ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இன்று (புதன்கிழமை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

ராமேசுவரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள், நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிச்சென்று மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த படகில் இருந்த 8 மீனவர்களையும் கைது செய்து இலங்கை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், படகு கடலில் மூழ்கி மாயமான 2 மீனவர்களை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவும், மீட்கப்பட்ட 2 மீனவர்களை ராமேசுவரம் அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இன்று (புதன்கிழமை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.