திராவிடர் கழகத்தின் முயற்சியால்தான் சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது: கி.வீரமணி

‘திராவிடர் கழகத்தின் தொடர் முயற்சியால்தான் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயாராகி வருகிறது’ என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திராவிடர் கழகம் சார்பில் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி குன்றக்குடியில் உள்ள குன்றக்குடி அடிகளாரின் நினைவு மண்டபத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செய்தார். பொன்னம்பல அடிகளார், முன்னாள் அமைச்சர் தென்னவன், திக மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்டத் தலைவர் வைகைறை, செயலாளர் செல்வமணி, சொற்பொறியாளர் பிராட்லா, மாநில பகுத்தறிவாளர் கழக துணை பொதுச் செயலாளர் கண்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் கி.வீரமணி கூறியதாவது:-

தமிழக சமுதாயத்துக்காக தொண்டாற்றியவர் குன்றக்குடி அடிகளார். முற்போக்கான முயற்சிகளை எடுத்த அவரை பெரியாரே போற்றியுள்ளார். திராவிடர் கழகத்தின் தொடர் முயற்சியால் தான் சமூக நீதிக்கு அடையாளமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தயாராகி வருகிறது’ என்றார்.

தொடர்ந்து உதயநிதி துணை முதல்வராவது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அமெரிக்காவில் இருந்து வெற்றியுடன் திரும்பியதும் யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை முதிர்ந்த அனுபவமுள்ள முதல்வர் தீர்மானிப்பார்’ என்றார்.