ஓய்வு நேரங்களில் சைக்கிள் ஓட்டலாம் என்று ராகுலுக்கு ஸ்டாலின் அழைப்பு!

சென்னையில் இருவரும் எப்போது ஒன்றாக சைக்கிள் ஓட்டலாம் என்ற ராகுல் காந்தியின் கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், சிகாகோவில் சைக்கிள் ஓட்டுவதைப் போன்ற விடியோவை இன்று (செப். 4) காலை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த விடியோவைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ”சகோதரரே, சென்னையில் நாம் இருவரும் ஒன்றாக எப்போது சைக்கிள் ஓட்டுவோம்” என்று கேட்டுள்ளார். ராகுல் காந்தியின் கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு. க. ஸ்டாலின், ”அன்புள்ள சகோதரரே (ராகுல் காந்தி), ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் ஒன்றாக சைக்கிளில் பயணித்து சென்னையின் இதயத் துடிப்பை அனுபவிப்போம். தங்களுக்கு நான் கொடுக்க வேண்டிய இனிப்பு இன்னும் பாக்கியுள்ளது. சைக்கிள் ஓட்டிய பிறகு, இனிப்புடனான தென்னிந்திய மதிய உணவை எனது வீட்டில் அருந்தலாம்” எனக் பதிலளித்துள்ளார்.