திருவள்ளுவர் கலாசார மையம் குறித்த அறிவிப்பிற்கு எல். முருகன் வரவேற்பு!

திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பும் வகையில், திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம், முதலாவது திருவள்ளுவர் கலாச்சார மையத்தை சிங்கப்பூரில் அமைப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று அறிவித்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:-

உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் அனைத்து தமிழர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பன்னெடுங்கால பழமை வாய்ந்த தமிழரின் கலாச்சாரம் விண்ணளவு உயரும் என்கிற மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தமிழ் மொழி, தமிழர் கலாசாரத்தை பாதுகாக்கிற முயற்சியாக எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

திருவள்ளுவர் கலாச்சார மையம் உலகெங்கும் வாழும் தமிழர்களை மொழி, கலாசாரம், வரலாற்று ரீதியாக இணைக்கிற பாலமாக அமையும். பல்வேறு காலகட்டங்களில் பல தேசங்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களை ஒன்றிணைக்கும் மையமாகவும் இந்த கலாச்சார மையம் செயல்படும். பிரதமர் மோடியின் குறிப்பிடத்தக்க சாதனையாக இந்த அறிவிப்பை பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.