பணியின்போது இறந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண உதவி!

ரோந்துப் பணியில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்த மீனம்பாக்கம் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் ரவிக்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:-

சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வந்தவர் ரவிக்குமார் (59). இவர் மீனம்பாக்கம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்தவேதனை அடைந்தேன்.

ரவிக்குமாரின் மறைவு தமிழக காவல் துறைக்கும் அவரது குடும்பத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். ரவிக்குமாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.