அமலாக்க துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி!

அமலாக்க துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தொடரப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக வழக்கறிஞர் மா.கவுதமன் தெரிவித்தார். அதையேற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய மனுவை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மா.கவுதமன், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கி விட்டதால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தொடரப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். அதையேற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.