புல்டோசர் அரசியலை நிறுத்திவிட்டு ஓநாய் பிரச்சினையை தீர்க்கலாம்: மாயாவதி!

யோகி ஆதித்யநாத் அரசு புல்டோசர் அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு, ஓநாய்கள் மனித குடியிருப்புகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்கு ஒரு உத்தியை உருவாக்க வேண்டும் என்று மாயாவதி கூறியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

உத்தரப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் வனவிலங்குகள் குழந்தைகள், மூத்தவர்கள் மற்றும் இளைஞர்களைத் தாக்கியுள்ளது. இதனைத் தடுப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏனென்றால், தொழிலாளர்கள், எளிய மக்கள் தங்களின் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்க முடியாமல் தவிக்கின்றனர். இவ்வாறு ஊருக்குள் வரும் வன விலங்குகளைத் தடுப்பதற்காக அரசு ஒரு உத்தியை உருவாக்க வேண்டும்.

அதேபோல் மாநிலத்தின் பாஸ்தி மாவட்டத்தில், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் நோயாளியை அழைத்துச்செல்லும் வழியில், நோயாளியின் மனைவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்த முயற்சி செய்தது ஒரு அவமானகரமான விஷயம். அந்த பெண்ணின் கணவர் உயிரிழந்து விட்டார். அந்த ஓட்டுநர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தரப் பிரதேச அரசும், சமாஜ்வாதி கட்சியும் புல்டோசர் அரசியலை உச்ச நீதிமன்றத்திடம் விட்டுவிட வேண்டும். அங்கு இதற்கு ஒரு முழுமையான நீதி கிடைக்கும். இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.