பெலிக்ஸ் ஜெரால்டு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!

பெலிக்ஸ் ஜெரால்டின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

யூடியூபர் சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பிய விவகாரத்தில் கடந்த மே 11ம் தேதி ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டு என்பவரை டெல்லியில் வைத்து தமிழ்நாடு போலீஸ் கைது செய்தது. தொடர்ந்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் சர்ச்சையான பேட்டியை ஒளிபரப்பியதை அடிப்படையாக கொண்டு அவரது ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலை முடக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பெலிக்ஸ் ஜெரால்டு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெலிக்ஸ் ஜெரால்டின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.